ஐபோன் வாங்க இளம்பெண் செய்த மோசடி செயல் - ஆடிப்போன வங்கி நிர்வாகம்
சென்னை மயிலாப்பூரில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் நுகர்வோர் கடன் பெற்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
எச்டிஎப்சி வங்கியின் கிளை மேலாளர் வெங்கட்ராமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் மயிலாப்பூர் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் ஐபோன் 10 Max செல்போனை ரூபாய் 1,08,160க்கு நுகர்வோர் கடன் மூலம், போலியான ஆவணங்கள் தயார் செய்து நாகப்பிரீத்தி என்பவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வாங்கி, வங்கியை ஏமாற்றிய நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஈரோட்டை சேர்ந்த ராதிகா என்பவர் கடந்த மாதம் 15 ஆம் தேதி பிடிபட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராதிகா தனது உறவினரான நாகப்ரீத்தி என்பவரின் பான்கார்டினை உபயோகப்படுத்தி போலியான வாகன ஓட்டுநர் உரிமம், கார்த்திகேயன் பெயரில் வங்கி கணக்குகள் தயார் செய்து HDFC வங்கியில் சமர்பித்து ரூபாய் 1,08,160/- மதிப்புள்ள Apple I Phone 10 Max என்ற செல்போனை வாங்கி வங்கிக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது.
மேலும் ராதிகாவும் அவரது கணவர் கார்த்திக் என்பவரும் 2015, 2016ம் ஆண்டுகளில் லோன் பெற்று தருகிறேன் பாலிசி எடுங்கள் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியது, கார் லோன் மோசடி, பிளிப்கார்டில் பொருட்கள் வாங்கி அதில் உள்ள பொருட்களை மாற்றி ஏமாற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டு கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, மதுரை போன்று பல இடங்களில் வழக்கும் பெற்றுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராதிகா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.