காங்கிரஸ் ஜெயிக்கிறதே பெரிய விஷயம்: பரபரப்பை கிளப்பிய முன்னாள் அரசியல் பிரமுகர்
காங்கிரஸ் தமிழகத்தில் 15 முதல் 20 தொகுதிகள் வரைதான் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம் என மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் திமுக தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
கடந்த முறை திமுக தலைவர் கருணாநிதி 41 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தார்.ஆனால் வெறும் 8 தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸ் வென்றது. திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு கங்கிரசுடன் கூட்டணி வைத்ததுதான் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.

ஆகவே, இந்த முறை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்தது. அதனால் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கட்டத்தில் கண்கலங்கி விட்டார் என செய்திகள் வெளியாக, கண்கள் என்று இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும் என பதிலளித்தார். இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
25 சட்டசபை தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர கன்னியாகுமரி லோக்சபா தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த தொகுதிகள் தான் காங்கிரசுக்கு உள்ளதாக சில நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைகாட்சிக்கு நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் 15 முதல் 20 தொகுதிகள் வரை வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயம். ஆகவே கூடுதலாக தொகுதிகளை பெற்று தோற்றுப் போவது நல்லது கிடையாது என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.