‘அப்போ ரஜினிகாந்த்..இப்போ இளையராஜா’ - எம்.பி ஜோதிமணி ட்வீட்
பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்' என்று இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்தில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை அண்மையில் வெளியிட்டது. அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்த இசைஞானி, பிரதமர் மோடி, அம்பேத்கர் போன்று செயல்படுவதாகவும் மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி,
‘இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று.அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம்.
ஆனால் அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது. ஆர் எஸ் எஸ் / பாஜக பாசிச ,பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று.
சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். முன்பு ரஜினிகாந்த்,இன்று இளையராஜா. ஆனால் தமிழ் மண் எச்சரிக்கையும் ,விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை,அமைதியை,ஒற்துமையை,வளர்ச்சியை விரும்புவது.
இதற்கு எதிரான ஆர் எஸ் எஸ்/ பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை, இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது. இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது. ஒரு கருத்தைக் கூறுவது ஒருவரின் உரிமை.
இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று.அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம்.ஆனால் அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது.
— Jothimani (@jothims) April 18, 2022
அந்தக் கருத்து சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.கருத்துரிமையும்,விமர்சிக்கும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது?’ என குறிப்பிட்டுள்ளார்.