காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை வருகை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை தமிழகத்துக்கு அழைத்து வந்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டனர். இதற்காக ராகுல் காந்தியிடம் அனுமதியும் பெற்றனர்.
அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 23-ந் தேதி முதல் 3 நாட்கள் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து 23ம் தேதி கோவை வருகை தருகிறார்.
இதற்காக அவருக்கு உற்சாக வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பின்னர் அவர், கோவையை சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர்கள் நெசவாளர்களை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சந்தித்து பேசுகிறார்.
அப்போது தற்போதைய தொழில்துறையின் நிலை, அதை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுகிறார். அதைத் தொடர்ந்து ராகுல்காந்தி விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்.