சிறுநீர் கழித்து, செருப்பால் அடித்து கொடுமை - காதலை ஏற்காத சாதிவெறி கும்பலின் அட்டூழியம்
தர்மபுரியில் காதல் திருணம் செய்து கொண்ட வாலிபரின் உறவினர்களை கடத்திச் சென்று துன்புறுத்திய சாதி வெறி கும்பல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகனான ரமேஷும், வேறு சமூகத்தைச் சேர்ந்த கதிரியப்பன் என்பவரின் மகள் மோகனாவும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து ஊரை விட்டு தலைமறைவாகினர். இதனையடுத்து மோகனாவின் பெற்றோர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 12 ஆம் தேதி மோகனாவின் உறவினர்கள் ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரை அருகே உள்ள எல்லப்பன் பாறை மாந்தோப்பிற்கு காரில் கடத்தி சென்று அடித்து உதைத்து மது குடிக்க வைத்தும், முகத்தில் சிறுநீர் கழித்தும் செருப்பால் அடித்தும் அவமதித்துள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த அப்பகுதி மக்கள் வந்து காயமடைந்த இருவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக ரமேஷின் உறவினர்கள் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளரிடம் எஸ்.சி.,எஸ்டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் அளித்துள்ளனர்.