அடுத்து சிக்கப்போகும் முன்னாள் திமுக அமைச்சர்.. கோபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் மீது தருமபுரி மாவட்ட திமுக சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கியமான நபராக வலம் வந்த முல்லைவேந்தன் மாவட்ட செயலாளர் பதவி வகித்த நிலையில், அவரது கட்சிப் பணிகளை பாராட்டி அவருக்கு திமுக தலைமை 1989, 1996, 2006 சட்டமன்ற தேர்தல்களில் வாய்ப்பளிக்கப்பட்டது. மொரப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அவர் 1996 ஆண்டு அமைந்த கருணாநிதி அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் 2001 ஆம் ஆண்டு ஒகேனக்கல் பகுதியில் அறநிலையத்துறை அதிகாரி ஒருவரை தனது ஆதரவாளர்கள் தாக்கிய புகாரில் சிக்கியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியில் அவருக்கான மதிப்பும் குறைய தொடங்கியது. இதனிடையே 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு முறையான பதில் அளிக்காத காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து முல்லைவேந்தன் நீக்கப்பட்டார். இதன்பிறகு 2016 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இணைந்து கொள்கை பரப்புச்செயலாளராக பதவி வகித்த அவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திமீண்டும் திமுகவில் இணைந்துக்கொண்டார்.
தொடர்ந்து பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த முல்லைவேந்தன் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனது ஆதரவாளர்கள் சுமார் 5,000 பேருடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்கு சென்ற முல்லைவேந்தன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழக அரசு சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
அப்போது பேசிய முல்லைவேந்தன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தருமபுரி மாவட்ட திமுகவில் ஆண்மையுடையவர்கள் யாரும் இல்லை என்பதால் தான் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ‘திருவண்ணாமலை திருடன்’ தருமபுரி வந்துச்செல்வதற்காக அரூர் - தருமபுரி நான்கு வழிச்சாலை போடப்படுவதாக அமைச்சர் ஒருவரை கடுமையாக சாடினார்.
இதனால் முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக முல்லைவேந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட திமுக சார்பில் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த நடவடிக்கையாக இவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.