மனசாட்சி இல்லையா? மலம் கலந்த குடிநீரை குடித்தவர்களுக்கு இழப்பீடு கொடுங்க - நீதிமன்றத்தில் முறையீடு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குடிநீரை குடித்தவர்களுக்கு இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மன தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முறையீடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இரட்டைக்குவளை முறை, பட்டியலினத்தவர் கோவிலில் நுழைய தடை போன்ற வெவ்வோறு முறைகளில் நடைபெறும் தீண்டாமைக் கொடுமை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகம் என்பவர் முறையீடு செய்திருந்தார். அதற்கு நீதிபதிகள் இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்து இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன் இந்த முறையீட்டை முன்வைத்தார்.
புதுக்கோட்டை முட்டுக்காடு - இறையூர் பகுதியில் அருந்ததியர் வசித்து வரும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கலக்கப்பட்டாதால் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது அந்த பகுதியில் இரட்டை குவளை முறை வழக்குகள், மற்றும் கோவிலில் பட்டியலினத்தவர் நுழைய முடியாத சூழல் இருந்ததும் தெரியவந்தது.
இழப்பீடு வழங்க உத்தரவிடுங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளிலும் தீண்டாமை கொடுமை பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகின்றன.
ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நிகழும் தீண்டாமை கொடுமைகளை கண்காணிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதுக்கோட்டை இறையூரில் மலம் கலந்த கழிவு நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள் முறையாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.