நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்– புகார் எண்களை வெளியிட்டு தமிழக அரசு எச்சரிக்கை
தேர்தல் நாளான நாளை ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்திருக்கிறது.
இதுதொடர்பாக தொழிலாள நல ஆணையர் வள்ளலார் வெளியிட்ட அறிக்கை வருமாறு - தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நாளைஅவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தமிழ்நாட்டில், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நாளை அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து புகார் அளிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளில் பெறப்பட்டு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலையளிப்பவர்கள் தேர்தல் நாளன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பது உறுதி செய்யப்படுகிறது.
மேலும், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார் இருப்பின் பொதுமக்கள் / தொழிலாளர்கள் கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் விவரம் கீழே கொடுக்கப்படுகிறது.
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.