சமூக ஆஸ்கர் விருது பெறும் தமிழ் பிரபலங்கள் ; ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
உதயநிதி ஸ்டாலின், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோருக்கு சமூக ஆஸ்கர் விருது வழங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை அளித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக ஆர்வலர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 11-வது பாராளுமன்ற உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.
அதில் ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021-ம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் மக்களின் துயர நிலையை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா உள்ளிட்ட ஜெய் பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19-ம் தேதி இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.