தவெகவிற்கு ஆதரவளித்தாலும் திமுக உடனே பயணிப்போம் - கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு
தவெகவிற்கு ஆதரவளித்தாலும் திமுக உடனே பயணிப்போம் என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.
தவெகவிற்கு கம்யூனிஸ்ட் ஆதரவு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது.

118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரா தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தலா எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது.
இதனையடுத்து, செயற்குழுவில் கலந்தாலோசித்த பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இதன் மூலம், தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
விசிக இன்று மாலை உயர்நிலைக்குழுவில் கலந்தாலோசித்து, நாளை முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

116 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் தவெக தலைவர் விஜய் இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்க புறப்பட்டுள்ளார்.
திமுக உடனே பயணிப்போம்
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர்கள், "மக்கள் தவெகவை முன் மொழிந்திருக்கிறார்கள், நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆட்சியமைக்க வாய்ப்புள்ள கட்சியாக தவெக மட்டுமே உள்ளது.

குடியரசு தலைவர் ஆட்சி மூலம் கொல்லைப்புறமாக பாஜக வருவதை தடுக்கவும், தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்குகிறோம். திமுக கொண்டு வந்த நலத் திட்டங்கள் தொடர வேண்டும்.
தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம். மற்றபடி மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளில், ஒத்த கருத்துடைய பிரச்சினைகளில் திமுகவுடன் சேர்ந்து பயணிப்போம்" என தெரிவித்துள்னர்.