காமன்வெல்த் 2022 - மேலும் 3 பதக்கம்.. புதிய வரலாறு படைத்த இந்தியா!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
முதல்முறை...
லான் பவுல்ஸ் போட்டியில் இந்தியா முதல்முறையாக பதக்கத்தை உறுதிசெய்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
போட்டியின் 4-வது நாளான நேற்று, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மைக்கேலா வொயிட்பூய்-ஐ இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் எதிர்கொண்டார்.
சுஷிலா தேவி
இதில், தோல்வியடைந்த சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 2014-ம் ஆண்டு போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்ற அவர், காமன்வெல்த்தில் ஜூடோ போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதனால், மணிப்பூரில் உள்ள அவரது சொந்த ஊரில் உறவினர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவினருக்கான ஜூடோ போட்டியில், விஜய்குமார் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
விஜய்குமார் யாதவ்
மகளிர் 71 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் ஒட்டுமொத்தமாக 212 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்தியா ஒட்டுமொத்தமாக 9 பதக்கங்களுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் சிங்கப்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரிவில் 4 பேர் கொண்ட அணிகளுக்கான லான் பவுல் அரையிறுதிப் போட்டியில்,
ஹர்ஜிந்தர் கவுர்
இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி, 16-13 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய மகளிர் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இப்போட்டியில் இந்தியா பதக்கம் ஏதும் வென்றதில்லை. இதனால், வெள்ளிப் பதக்கத்தை உறுதிசெய்து இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.