கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு முக்கிய முடிவு
தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான முழுவாண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக உயர்கல்வி செல்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்பதால், பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு 12ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடும் முறையை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணில் 50%, 11 வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணில் 20% மற்றும் 12ம் வகுப்பின் செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் இருந்து 20% ஆகியவற்றை கொண்டு 12ம் வகுப்பிற்கு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். மாணவர் சேர்க்கையை அடுத்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் பரவலாக எழுந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் அனைத்து கல்லூரிகளிலும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர் சேர்க்கை நடக்கும் கையோடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்தே
கல்லூரிகள் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.