இன்ஸ்டாகிராம் காதல் மூலம் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்ததில் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அய்யப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த டிப்ளமோ மாணவர் பார்த்தசாரதி என்கின்ற பாலாஜி என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. இவ்வாறு அவர்கள் கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
மேலும் கடந்த 2மாதத்திற்கு முன்பு சிறுமியை தனது பைக்கில் அழைத்து கொண்டு சென்னை முழுவதும் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவரான பார்த்தசாரதி என்கின்ற பாலாஜியை கைது செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.