நேருக்கு நேர் மோதிய கல்லுாரி, பள்ளி வேன் - அதிர்ச்சியில் உறைந்து போன மாணவர்கள்
திருச்சியில் பள்ளி, கல்லுாரி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கல்லுாரி பேருந்து
திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் கல்லூரி பாலிடெக்னிக் பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது வேகமாக சென்றுள்ளது.
அப்போது பேருந்தை டிரைவர் கண்ணனால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மாணவ, மாணவிகள் காயம்
இந்த விபத்தில் 2 மாணவி,ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.