நடுரோட்டில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் - கடுப்பான பொதுமக்கள்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் சண்டையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே நேற்று மாலை கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக மாணவிகள் காத்துகொண்டிருந்த போது திடீரென இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. மாணவிகள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆபாசமாகவும் அறுவருக்க தக்கவகையிலும் மாணவிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதை பார்த்த சக மாணவிகளே அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.