தமிழ் சினிமா துறையில் மட்டுமல்ல, கோவை தெற்கு தொகுதியிலும் மாற்றம் செய்து காட்டுவேன்- கமல்
தமிழ் சினிமா துறையில் செய்த மாற்றத்தை போல கோவை தெற்கு தொகுதியிலும் மாற்றம் செய்து காட்டுவேன் எனவும், 66 வயதாகி விட்ட நிலையில் இப்போதே வாய்ப்பை என் கையில் கொடுங்கள் என கோவை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார். கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமலஹாசன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது கோவையில் ஏன் போட்டி என கேட்கின்றனர், நான் ஏன் போட்டியிட கூடாது என கேள்வி எழுப்பினார். 234 தொகுதிகளிலும் என் உறவுகள் இருக்கின்றனர் என கூறிய அவர், ஆரம்பத்தில் இருந்தே ஒரு சாதி ,மத பிரிவில், நாத்திகன் என என்னை அடைக்க முயன்றார்கள் என தெரிவித்தார். தேர்தலில் மயிலாப்பூரில் நான் நிற்பேன் என்றார்கள் எனவும், அங்கு என் உறவினர்கள் இருக்கின்றனர் என்பதால் அங்கு நிற்பேன் என்றார்கள், ஆனால் அங்கும் என் உறவினர்கள் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை.
சட்ட மன்ற தேர்தலுக்கு பின் நான் நடிக்க போய்விடுவேன் என கேவலமானதை போல சொல்கின்றனர் எனவும், நடிப்பு என் தொழில் எனவும், ஆனால் உங்களுக்கு அரசியல்தான் தொழில் எனவும், இந்த வித்தியாசத்தால்தான் நீங்கள் தோற்க போகின்றீர்கள், நாங்கள் ஜெயிக்க போகின்றோம் எனவும் தெரிவித்தார். 33 சதவீத கிரிமினல்கள் அந்த இரு கட்சிகளிலும் இருக்கின்றனர் என தெரிவித்த கமல், எது பெட்டர் சாய்ஸ் என்பது உங்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயர் கோவைக்கு இருந்தது எனவும், முதலில் ஆட்சியில் இருந்தவர்கள் மின் வெட்டால் தொழில்களை வேறு மாநிலத்திற்கு ஓடிவிடும்படி செய்தார்கள், அடுத்து ஆட்சியில் இருந்தவர்கள் கடன் சுமையை 7 லட்சம் கோடியாக மாற்றி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். தண்ணீர் இல்லாத ஊரில் வாசிங் மிஷன் கொடுப்பதாக சொல்கின்றனர், ஆளத் தகுதியும், ஆளும் தன்மையும் ஆட்சியாளர்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் சாதனையாளர்கள் என தெரிவித்த அவர், கொங்கின் சட்டநாதம் கோட்டையில் ஒலிக்க வேண்டும். அதை ஒலிப்பவன் நானாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.