கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சில்லறை விற்பனைக்கு தடை : வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!
கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடைகள் மூடப்பட்டுள்ளதால் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகரித்தள்ளதால் தமிழக அரசின் சார்பில் நேற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்றும் தடுக்கும் வகையில், மக்கள் அதிகளவு கூடும் பொழுதுபோக்கு தளங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கு, உணவகங்கள் மற்றும் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் மக்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை முதல் கோயம்பேடு சந்தையில் இயங்கிவரும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவு குவிந்தனர். இருப்பில் உள்ள சரக்குகளை விற்றுத் தீர்ப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டினார்.
நாளை முதல் கடைகள் மூடப்படுவதால் பொருட்களின் விலை குறைந்து விற்கப்படுகிறது. இதன்காரணமாக கோயம்பேடு பகுதியில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சில்லறை விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளதால் கோயம்பேடு நிர்வாக அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரிக்குமே தவிர குறையாது.
இதனால், கொரோனா பரவல் அதிகரிக்கும். எனவே சில்லறை வியாபாரிகளையும் விற்பனைச் செய்ய அனுமதிக்கவேண்டும். இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை என நேர கட்டுப்பாடு விதித்த மொத்த, சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கவேண்டும் என்றும், கடன் வாங்கி வியாபாரம் செய்வதால் தற்போதுதான் சில்லறை வியாபாரிகள் ஒரேளவுக்கு நிதானமான நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதனை கருத்தில்கொண்டு சில்லறை வியாபாரிகளும் விற்பனைச் செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.