கோவையில் 60 சதவீதம் தொற்று குறைந்துள்ளது - அமைச்சர் கே.என்.நேரு!
தமிழகத்தில் சென்னையில் தான் தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. இதனால் சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக, பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் தற்போது சென்னையை விட கோவை அதிக பாதிப்புகளுடன் முதலிடத்துக்கு வந்தது.
கோவையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், நேரிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கொரோனா சிகிச்சை வார்டுக்குள்ளேயே சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில், கோவையில் பாதிப்பு 60% குறைந்திருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும் அதற்கான சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.