நிலக்கரி தட்டுப்பாடு : தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருப்பதால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் மின்சாரத்தின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆக இருக்கும் நிலையில், அங்கு தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், 3 அலகுகளை தவிர்த்து 2 அலகுகளில் சுமார் 420 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.