நாளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை நாளை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்படும் என அறிவித்தார்.

மே மாத இறுதியில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், நிர்வாக காரணங்களால் கடைசி நேரத்தில் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு பிரிவுக்கு ஐஜியாக கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இது சிறப்பு அதிரடிப்படையானது முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்பட உள்ளது.

இதனால், எந்தவித அரசியல் தலையீடுமின்றி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பொது இடங்களிலும், இணைய வழியிலும் நடக்கும் குற்றங்களைத் தடுத்து, அவசரக் காலங்களில் அவர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்தப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த படை ரோந்து பணிகளை மேற்கொள்ளும்.
இந்த படையினருக்கு சர்வதேச காவல்துறை தரத்திற்கு இணையாக, முற்றிலும் புதிய மற்றும் நவீன வடிவமைப்புடன் கூடிய நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிற தொப்பி அடங்கிய சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இதன் லட்சினை பெண் காவலரும், சிங்கமும் உள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.