தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இதுகுறித்த அரசியல் மற்றும் மாநில நலன் சார்ந்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கடந்த முறை போதிய ஆதரவு இல்லாததால் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.