நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய்
4 tamilnadu ministers to reach delhi for nepal flood rescue நேபாளத்தில் 103 தமிழ்நாட்டு பயணிகள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி செல்ல உள்ளனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள்
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

1,500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
இதில் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.

இதில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை காட்மாண்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை மீட்பது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
டெல்லி விரையும் 4 அமைச்சர்கள்
இதனையடுத்து நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு சுற்றுலா பயணிகளை மீட்பது குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகிய 4 பேரையும் மீட்பு பணிகளை மத்திய அரசுடன் இணைந்து தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் செல்ல உள்ளது.