போதைப்பொருள் தடுப்பில் இணையும் கேரளா - தமிழ்நாடு : முதல்வர் விஜய்க்கு அழைப்பு
கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளதாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளம் மற்றும் தமிழ்நாடு இணைந்து போதைப்பொருள் தடுப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு மாநிலங்களும் ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேலும், கேரள அரசின் பிராண்ட் தூதரான நடிகர் மோகன்லாலும், முதலமைச்சர் விஜயும் இணைந்து கேரளத்தில் நடைபெறும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

போதைப்பொருள் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான சவாலாக இருப்பதால், கேரளம்–தமிழ்நாடு இணைந்து நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், தென்னிந்திய அளவில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கேரளத்தின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தகவல் கேட்டறிந்ததாகவும் ரமேஷ் சென்னிதலா கூறினார்.