ஜோதிடருக்கு அரசுப் பதவி - விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு

Vijay Government of Tamil Nadu
By Karthikraja May 12, 2026 01:43 PM GMT
Report

ஜோதிடருக்கு தவெக அரசில் அரசுப் பதவி வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜோதிடருக்கு அரசுப் பதவி

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜோதிடருக்கு அரசுப் பதவி - விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு | Cm Vijay Face Condemns For Astrologer Govt Post

ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், சுமார் 40 ஆண்டுகளாக ஜோதிடராக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் வெற்றியை இவர் கணித்ததாக கூறப்படுகிறது.

மேலும், விஜய் கட்சி தொடங்கிய பின்னர், தவெக 150 இடங்களில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆவார் என கணித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து விஜய்க்கு ஆன்மீக ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை இவர் வழங்கியதாகவும், அதன்படியே விஜய் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர்களுக்கே இன்னும் துறை ஒதுக்கப்படாத நிலையில், தனது ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பொறுப்பு வழங்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

அவருக்கு என்ன பணிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், "எனக்கே புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் OSD (சிறப்புப் பணி அதிகாரி) பதவி தேவைப்பட வேண்டும்? யாராவது விளக்க முடியுமா?" என்று கேட்டுள்ளார். 

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகமும் இந்த நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர். 

அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார்.

அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல" என தெரிவித்துள்ளார். 

"மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை மறு பரிசீலனை செய்யவேண்டும்" என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.