தொகுதி மறுவரையறை - தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

இந்த மறுவரையின் மூலம், தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் போது, இந்திய அரசியலமைப்பின் 369வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3 இல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற இந்த மசோதா மீதான வாக்கெடுப்பின் போது 528 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்தனர். அதன்படி, 352 பேரின் வாக்குகள் இருந்தால் மட்டுமே மசோதா நிறைவேறும் நிலை இருந்தது.
ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் விழுந்தன. இதனால் மசோதா தோல்வி அடைந்தது.
தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளின் எம்.பி க்கள் பலர், பாஜகவுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.
ஆகஸ்ட் 3வது வாரத்தில் சிறப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு
இந்நிலையில், இந்த தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 8.8.2026 அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது.
இதில், 22 திமுக எம்பிக்கள் தவிர்த்து, 9 காங்கிரஸ் எம்பிக்கள், 2 விசிக எம்பிக்கள், 1 மதிமுக, 1 முஸ்லீம் லீக் எம்.பி தவெக கூட்டணியில் உள்ளனர்.
தலா 2 எம்.பிக்களை உடைய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், தவெக கூட்டணியில் இணையாமல் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்குகிறது.