அம்மா உணவகம் மூடப்படுமா? இது கலைஞர் மீது ஆணை சட்டசபையை அதிர வைத்த ஸ்டாலின் !
தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி. எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்பட வில்லை" என்றார் .
தொடர்ந்து பேசிய அவர், "அம்மா மினி கிளினிக் கிளினிக்களை மூடி விட்டோம்.. அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை.. என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பட்டியலை படித்தார்.
இதுபோன்ற படிக்க வேண்டும் என்றால் என்னிடம் நிறையவே இருப்பதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் :
கலைஞர் அவர்களால் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு., அது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் திறக்கப்பட்டது.
ஆனால், ஆட்சி மாற்றம் நடைபெற்று, சட்டமன்றம் நடந்த இடத்தில் மருத்துவமனையாக மாற்றியது யார்? பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு மாடிகள் அளவில் கட்டப்பட்ட மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயன்றதும், பராமரிக்காமல் பாழடைந்து போனதுக்கு யார் காரணம்?
அங்கிருந்த அண்ணா சிலையின் கீழே கலைஞரை மறைத்தது யார்? கலைஞர் காப்பீட்டு திட்டத்தில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கலைஞர் பெயரை நீக்கியது யார்?
செம்மொழிப் பூங்காவில் கலைஞர் பெயரை செடிகொடிகளை வைத்து மறைத்தது யார்? கடற்கரை பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்?
ராணிமேரி கல்லூரியில் கலைஞர் அரங்கத்தில் பெயரை நீக்கியது யார்? உழவர் சந்தைகளை இழுத்து மூடியது யார்?
இப்படி வரிசையாக நீண்ட நேரம் என்னால் சொல்ல முடியும், பல கேள்விகளை கேட்க முடியும்.
இதையெல்லாம் நீங்கள் செய்தீர்கள்., அதனால் நாங்கள் செய்தோம் என்று சொல்லவரவில்லை. அப்படி நடந்து கொள்ளக் கூடிய எண்ணம் எனக்கு ஒரு காலமும் வராது.
மாண்புமிகு அவை முன்னவர் கலைஞர் பெயரால் திட்டங்கள் மாற்றப்பட்ட ஆதங்கத்தில், அம்மா உணவகம் மூடினாள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
என்னைப் பொறுத்தமட்டில் நான் அப்படி நினைக்கவில்லை. எந்த அம்மா உணவகமும் மூடபடக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம்.
அதனால்தான் ஆட்சிப் பொறுப்பு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என்று அறிவித்தேன்.
இன்றுவரை அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நிச்சயமாக இருப்பேன். அதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்"
திமுகவை சார்ந்தவர்களே தவறு செய்தாலும், ஏன் சிறிய குற்றம் இழைத்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அண்ணா, கலைஞர் மீது ஆணையிட்டு சொல்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.