மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேசி பிரபலமடைந்த சிறுவன் அப்துலுக்கு புதிய வீடு - அமைச்சர் அறிவிப்பு
மனிதநேயம் மற்றும் மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேசி பிரபலமடைந்த மாணவர் ஏ.அப்துல் கலாம் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
“என்ன எல்லாரும் பல்லன்’னு தான் கூப்டுவாங்க..ஆனா எனக்கு எல்லாருமே புடிக்கும், எல்லாரும் நண்பர்கள் மாறி தான்” என சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் அப்துல் கலாம்.
இவன் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய பதிவால் தமிழகம் முழுவதும் புகழப்படும் மினி செலிபிரிட்டியாக மாறினான்.
இவரது பேச்சை கேட்டு வியந்த முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர் அப்துல் கலாமை நேரில் அழைத்து பாராட்டினார்.
அப்போது, "தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும்,
அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் சிறுவன் அப்துல் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் மாணவர் ஏ.அப்துல் கலாம் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் பகிர்ந்துள்ளார். அதில்,
இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி
— Tha Mo Anbarasan (@thamoanbarasan) February 25, 2022
1/4 pic.twitter.com/fyYvwnhjlT
“இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது,
தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்ற தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று துறை அமைச்சர் என்ற முறையில் நேற்று தொலைபேசி வாயிலாக உத்திரவிட்டார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து
சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டேன்.
நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும்.
பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக வழங்கினேன்.” என பதிவிட்டுள்ளார்.