அடுத்தடுத்து முதலமைச்சர் மீது நடந்த தாக்குதல்கள் - போலீசார் அதிரடி நடவடிக்கை
பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் மீது அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம்- பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் உள்ளார்.
பொதுவாக ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் பாதுகாப்பு வழங்க தேசிய பாதுகாப்பு படையால் சிறப்பு பயிற்சி பெற்ற எஸ்எஸ்ஜி எனப்படும் மாநில பாதுகாப்பு படையினர் பணியாற்றி வருகின்றனர். முதலமைச்சரின் பயணம் முதல் அவர் தங்கும் இடம் வரை அனைத்து பகுதிகளிலும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலப் பாதுகாப்பு படை தான் உறுதி செய்கிறது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நாளந்தா மாவட்டத்தில் நிதீஷ்குமார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் சுபம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தானும் தனது குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து முதல்வரின் கவனத்தை ஈர்க்கவே வெடிகுண்டு வீசியதாக குறிப்பிட்டார்.
அதற்கு சில நாட்கள் முன்னதாக பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொண்டார். அங்கு இருந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இளைஞர் ஒருவர் முதல்வரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். இருப்பினும் முதலமைச்சர் அறிவுறுத்தல்படி அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வுகளால் முதலமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். அதன்படி நிதீஷ்குமாருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இனிமேல் முதலமைச்சருக்கு பாதுகாப்புப் பணியில் மேலும் 50 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.