காவலர்களுக்கு தெரியாமல் அம்மா கொடுத்த சூப் : சிறை அனுபவத்தை நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
மிசா காலத்தில் தான் சிறையில் இருந்து மருத்துவம் பார்க்க வந்த அனுபவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துகொண்டார்.சென்னையில் தமிழில் காது மூக்கு தொண்டை அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பொதுவாக இது போன்ற மாநாடுகள் ஆங்கிலத்தில் நடைபெறும். கோட் சூட் அணிந்த நபர்கள் கலந்துகொள்ள ஸ்டார் ஓட்டலில் நடைபெறும். ஆனால் இந்த மாநாட்டை நடத்துபவர்கள் வேட்டி அணிந்து, கலைஞரால் தொடங்கப்பட்ட முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறுகிறது. கலைஞர் இருந்திருந்தால் இப்படியொரு மாநாடு நடைபெறுவது குறித்து எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
சூப் கொண்டு வருவார்
மோகன் காமேஸ்வரனின் தந்தையிடம் நான் சிகிச்சைப் பெற்றுள்ளேன். கலைஞர் குடும்பத்திற்கே காமேஸ்வரனும் மோகன் காமேஸ்வரனும் தான் மருத்துவர்கள். நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்கு காது பிரச்னை ஏற்படவே நான் அரசு பொது மருத்துவமனைக்கு அவரை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். நான் வருவது தெரிந்து எனது தாய் எனக்கு சூப் கொண்டு வருவார்.
இலவசத்தை வழங்க தூண்டியவர்
காவலர்களை வெளியே நிற்க வைத்து விட்டு அவரது அறையில் இருக்கும் எனது தாயை சந்தித்து சூப் வழங்க சொல்வார் மருத்துவர் காமேஸ்வரன். காதுகளுக்கான cochlear implant இலவசமாக ஏழைகளுக்கு வழங்க தூண்டியவர் மோகன் காமேஸ்வரன் தான். சில நாட்கள் முன், சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவில் வட மாநில பெண் தன் மகனுக்கு cochlear சிகிச்சை கிடைக்கப்பெற்றது என மகிழ்ச்சியாக கூறினார்.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக cochlear சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு தொண்டை முக்கியம். தொண்டை போய் விட்டால் எங்கள் தொண்டே போய்விடும் எனக் கூறினார்.