மொழித் திணிப்பு விளைவு..உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம் -ஸ்டாலின்!
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இந்தி திணிப்பு
தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ.க. வினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்?
சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? என்ற வேறுபாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும். ஒன்றிய கல்வி அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய
சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி. இதே காலகட்டத்தில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே. சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்டதில் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு செலவிடப்பட்டுள்ளது.
திமுக
சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் முன்பைவிட பல மடங்கு பணம் ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்டு வருகிறது. ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது.
தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது.
மொழித் திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.