திருச்சியில் வானவில் மன்றம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu K. N. Nehru Anbil Mahesh Poyyamozhi Tiruchirappalli
By Thahir Nov 28, 2022 08:35 AM GMT
Report

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் திட்டத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வானவில் மன்றம் திட்டம் 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில், பல திட்டங்களையும் , உதவித்தொகைகளை அரசு வழங்கி வருகிறது.

அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனையை அறிவியலின் பக்கம் திருப்பி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் உத்வேகத்தை வழங்கும் வகையில் வானவில் மன்றம் (STEM) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வானவில் மன்றம் மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Chief Minister M.K.Stalin launched the Rainbow Forum project

மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் 

வானவில் மன்றம் திட்டம் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 13,200 பள்ளிகளில் பயிலக்கூடிய 20 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைய இருக்கிறார்கள். இதற்காக 2000 தன்னார்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் 20 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாதமும் ஒரு பள்ளி என்ற வீதம் முப்பது அறிவியல் சோதனைகளை செய்து அவற்றை STEM செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவருக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்கப்படும். மேலும் 710 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநிலங்கள் உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக வானவில் மன்றம் திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்து வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து தமிழக முதலமைச்சர் கலந்துரையாடினார்.