‘தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும்’ : வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

cinema-vivek-vairamuthu
By Nandhini Apr 16, 2021 11:08 AM GMT
Report

நடிகர் விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும் என கவிஞர் வைரமுத்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவரின் நகைக்சுவை நடிப்பில் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்தது. ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘இன்னைக்கு செத்தா.. நாளைக்கு பால்...’ என்று விவேக் பேசிய வசனம் மக்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும். நகைச்சுவையோடு இல்லாமல், சமூக ரீதியாக மக்களுக்கு சிந்திக்க கூடிய வகையில் அவருடைய நகைச்சுவை இருக்கும்.

நேற்று விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகர் விவேக்கின் உடல் நலம் குறித்து பேசிய அவரது பி.ஆர்.ஓ நிகில் முருகன், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்ய அக்கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


இந்நிலையில், நகைச்சுவை நடிகர் விவேக் விரைவில் நலம்பெற வேண்டுமென கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சின்னக் கலைவாணர் தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும்; மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.