‘வேண்டும் என்றே சீண்டும் நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்...’ - விஜய் சேதுபதி வழக்கறிஞர் தகவல்
நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்த நடிகர் மகா காந்தி சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கடந்த மாதம் 2ம் தேதி, பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது, அதனை ஏற்க மறுத்து, விஜய் சேதுபதி பொதுவெளியில், தம்மை இழிவாக பேசியதாகவும், பிறகு, விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தம் மீது, விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன், காதில் அறைந்ததாகவும் இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இந்த வாரம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, நடிகர் மகாகாந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாக நடிகர் விஜய்சேதுபதியின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் தெரிவித்திருக்கிறார்.
பெங்களூரு விமான நிலைய சம்பவத்தில், எந்த புகாரும் வேண்டாம் என்று காவல்நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு, தற்போது விஜய்சேதுபதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.