மகனுக்காக ரூ.25 கோடி பேரம் பேசிய ஷாருக்கான் : CCTV கேமரா மூலம் ஆதாரத்தை கண்டுபிடித்த போலீசார்!
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த மாதம் 2-ம் தேதி ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து, ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
குறிப்பாக சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என்றார். இந்த விவகாரத்தில், பொது சாட்சியான பிரபாகர் சாயில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். அதில் அவர் போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக கூறினார்.
இந்த பேரம் குறித்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ம் தேதி சந்தித்து பேசியதாக கூறினார்.
பிரபாகர் சாயிலின் இந்த குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அவர்கள் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டில் கூறியது போல, கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிகவளாகம் அருகில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்தது உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதில் பூஜா தத்லானியின் கார் என கூறப்படும் நீல நிற மெர்சிடஸ் பென்ஸ் காரிலிருந்து இறங்கும் பெண் ஒருவர், கிரன் கோசவியிடம் பேசும் காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. பின்னர், கிரன் கோசவி, அந்த பெண், சாம் டிசோசா ஆகிய 3 பேரும் அவர்களது வாகனங்களில் தனித்தனியாக அங்கிருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் அந்த கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 பேரும் சந்தித்து பேசியது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை" என்றார்.