மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்னை - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது என்று அவரது மகள் சவுந்தர்யா கூறியதால், ரஜினிக்கு எதிராக சிலர் பொங்கி எழுந்துள்ளனர். ‘அண்ணாத்தா’ படத்தை பார்க்க வேண்டாம் என்ற கோஷத்தை தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். ரஜினியின் இளைய மகள் சவுந்தரா நேற்று, 'ஹூட் ஆப்' என்ற குரல் மூலம் கருத்துகளை பதிவு செய்யும் புதிய செயலியை தொடங்கினார். அந்த புதிய செயலியை நடிகர் ரஜினிகாந்த் தன் குரலில் பதிவு செய்து தொடங்கி வைத்தார்.
இந்த துவக்க விழாவில் சவுந்தர்யா பேசுகையில், என் அப்பா ஆசியுடன் இதை தொடங்கி இருக்கிறேன். அவர் எனக்கு தகவல் அனுப்பினால் பேசி அனுப்புவார். அந்த குரலை கேட்டபோது எனக்கு இந்த 'ஹூட் ஆப்' யோசனை தோன்றியது. எழுத படிக்க தெரியாதவர்கள் தங்கள் குரலில் கருத்துகளை பதிவு செய்து கொள்ளலாம்.
என் அப்பா பல மொழிகள் சரளமாக பேசுவார்; படிப்பார். ஆனால், தமிழ் சரளமாக எழுத வராது. இதை சொல்கிறேன் என்றால், அவருடன் பேசிய பின் தான் சொல்கிறேன். தமிழ் எழுத முடியாது என்பதால், அப்பா மீதான பாசம் போய் விடுமா? என்றார்.
ரஜினிக்கு தமிழ் சரளமாக எழுத தெரியாது என்ற விஷயத்தை, சவுந்தர்யா கூறியது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'அண்ணாத்த படத்தை பணம் கொடுத்து, தியேட்டரில் பார்க்க மாட்டோம்' என்றும் எதிர்ப்பு குரல்கள் எழும்பி உள்ளன.