இதெல்லாம் ஏன்பா... திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டுவிடுங்கள் - நடிகர் ராதாரவி
‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியானதிலிருந்து படக் காட்சிகள் குறித்த சர்ச்சை எழுந்து வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திரைப்பட கருத்துகளை திரையரங்குகளிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறி இருக்கிறார்.
‘ஆன்டி இண்டியன்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், நடிகர் ராதாரவி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது -
திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டு விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும். தற்போது ஒரு திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டு விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியாகும்போது இந்த திரைப்படத்தை பற்றி பேசுவார்கள், விமர்சிப்பார்கள். திரைப்பட கருத்துக்களை திரையரங்கோடு விட்டுவிட்டு வருவதே சிறந்தது. ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படத்திலும் பல சர்ச்சைகள் உள்ளது.
இருந்தாலும் சிறந்த முறையில் இயக்குனர் கையாண்டு உள்ளார். தற்போதைய சூழலில் உண்மை கதை என்று பெயர்களை மாற்றி மாற்றி எடுக்க கூடிய சம்பவங்கள் நடந்து வருகிறது. அதுபோல பல திரைப்படங்களை எடுக்க முடியும்.
தற்போதைய சூழலில் ஓ.டி.டியில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. 5 ஆண்டுகள் கழித்து நடிகர்களின் சம்பளங்களை ஓ.டி.டி நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கப் போகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.