பிரபல நடிகர் R.N.R.மனோகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராக வலம் வந்த R.N.R.மனோகர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான ‘கோலங்கள்’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்றினார்.
அப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படத்துக்கும் வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. மிருதன், ஈட்டி, கைதி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், R.N.R.மனோகர் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு சினிமா திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.