அட்லீ படத்திலிருந்து விலகினார் நடிகை நயன்தாரா? ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா? - நடந்தது என்ன?
அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்திலிருந்து நடிகை நயன்தாரா விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ படம் வெற்றியையடுத்து, இயக்குநர் அட்லீ பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்திருக்கிறார்.
இப்படத்திற்கு, ‘லயன்’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார்கள். யோகி பாபு, பிரியாமணி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. நடிகை நயன்தாராவும், பிரியாமணியும் பங்கேற்றப் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், திடீரென இப்படத்திலிருந்து நயன்தாரா விலகி இருப்பதாகவும், அவருக்குப் பதில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றன. கடந்த அக்டோபர் 2ம் தேதி ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனால், அக்டோபர் மாதம் முழுவதும் ஷாருக்கானால் அட்லீ பட ஷூட்டிங்கில் நடிக்க முடியாமல் போனது. இதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நயன்தாரா ‘பிரேமம்’ இயக்குநரின் புதிய படம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப்படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
அக்டோபர் மாதம் அட்லீ படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி இருந்தார் நடிகை நயன்தாரா. ஆனால், ஆர்யன் கான் சர்ச்சையால் ஷூட்டிங் நடைபெறாததால், நயன்தாராவின் தேதிகள் வீணாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் அட்லீ படப்பிடிப்பு துவங்கினாலும் வெவ்வேறு படங்களுக்கு நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கி இருப்பதால், அப்படங்களில் நடித்தே ஆகவேண்டிய நெருக்கடியில் நயன்தாரா உள்ளார்.
இந்த காரணத்தை சொல்லித்தான் நயன்தாரா விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவும், சமந்தாவும் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது இந்த விவாகரத்திற்குப் பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் சமந்தா நடித்து வருகிறார். அவரது நடிப்பில் விரைவில் ‘சகுந்தலம்’ படம் வெளியாக உள்ளது.