டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா கண்டனம் - நடந்தது என்ன?
மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமை விவகாரத்தில் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -
டி.ராஜேந்தர் அவர்களுக்கு வணக்கம்...
தங்கள் மகன் திரு.சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் திரு.சுரேஷ் காமாட்சி தயாரித்து வெளியான மாநாடு திரைப்படம் சம்பந்தமாக தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் TFAPA பலமுறை தலையிட்டு படம் சுமூகமாக வெளியாக உதவியதை தாங்கள் அறிந்ததே. படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று திரு.சிலம்பரசன் அவர்களின் வியாபாரமும், அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்த திரையுலகும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தெடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
மாநாடு வெளியீட்டுக்கு முந்தைய நாள் மொத்த திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்கு சான்று.
படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்பட்டால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்திரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரிய மனதுடன் ஒத்துக் கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்திரவாதம் தர முன்வந்தீர்கள்.
படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து தொலைக்காட்சி உரிமம் நல்ல விலைக்கு விற்று இன்று தயாரிப்பாளரே கடனை திருப்பித் தருகிறார். ஆனால், திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோர முடியுமா?
திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞரும் ஒரு பாரம்பரிய வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா? ஒரு அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்?
நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா? இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திரு.சுரேஷ் காமாட்சியும் நஷ்டஈடு கேட்டு உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்?
வியாபார குளறுபடிகளை ஏற்படுத்திதோடு அல்லாமல் வழக்குப் போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருப்பதை தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.