விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லாவிட்டால்... - எச்சரிக்கை விடுத்த இந்து மக்கள் கட்சியினர்
கொந்தளிப்பு இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படம் வெளியாகி ஹிட்டானது. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மெகா ஹிட் அடித்தது. இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘பிச்சைக்காரன்- 2 ’உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்து மதத்தினரை பெரிதும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இது குறித்து, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அறிந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் காளி படத்தோடு பிச்சைக்காரன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது .
இதனால் விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்ட பின்னர் அந்த போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் விஜய் ஆண்டனி மீதும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீதும் வழக்கு தொடரப்படும்.
மேலும், சினிமா என்கிற போர்வையில் இந்து கடவுள்களை அசிங்கப்படுத்தும் விதமாக மத நல்லிணக்கத்திற்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்கள் வெளியாகி வருவது கண்டனத்திற்கு உரியது.
இந்து கடவுள்களை இப்படி பயன்படுத்துவது போல மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு பிச்சைக்காரன் -2 என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா? இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்து கடவுள் காளியின் படத்தை போட்டு அதில் பிச்சைக்காரன் என்ற வாசகம் இருப்பதால் இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.