நடிகர் கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகனுக்கு விரைவில் ‘டும் டும் டும்’ – மணப்பெண் இவர்தானாம்!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் சினேகன், கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தார். இதனையடுத்து, இவர் 1997ம் ஆண்டு வெளிவந்த ‘புத்தம் புது பூவே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து இவர் பாண்டவர்பூமி, மௌனம் பேசியதே , பகவதி, சாமி, கோவில், ஆட்டோகிராப், மன்மதன், ராம் , பருத்திவீரன், யோகி உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 1ல் கவிஞர் சினேகன் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். கவிஞர் சினேகனும், நடிகை கன்னிகா ரவியும் எட்டு வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். தற்போதுதான், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் ‘அமுதா ஒரு ஆச்சரியக் குறி’ தொடரின் மூலம் அறிமுகமானவர்தான் கன்னிகா ரவி. இதனையடுத்து, இவர் ‘சரித்திரம் பேசு’, ‘சத்திரபதி’, ‘தேவராட்டம்’, ‘அடுத்த சாட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘கல்யாணவீடு’ என்ற சீரியலில் நாயகியாகவும் நடித்த இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.
கவிஞர் சினேகன் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். வரும் 29ம் தேதி அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து கவிஞர் சினேகனுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.