நான் என்னையே நம்புவதற்கு அஜீத் சார் தான் காரணம் - ஜான் கொக்கேன் நெகிழ்ச்சி
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கேன் அஜித் குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் நடிகர் ஜான் கொக்கேன் ‘வேம்புலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆர்யாவுக்கு எதிரான அந்தக் கதாபாத்திரம் இப்படத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், தனக்கு கிடைத்த வரவேற்புக்கு நடிகர் அஜீத் சார் தான் காரணம் என்று ஜான் கொக்கேன் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், "என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி அஜீத் சார். நான் என்னையே நம்புவதற்கு நீங்கள் தான் என்னை ஊக்கப்படுத்தினீர்கள். வீரம் ஷூட்டிங் நாட்களின் போது நான் உங்களுடன் கழித்த நேரங்கள் தான் எனக்கு வாழ்க்கை படமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தீர்கள். வேம்புலி என்ற இந்தக் கதாபாத்திரத்தை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார். அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தயவு செய்து பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.