‘அஞ்சான்’ பட நடிகர் கொரோனாவால் உயிரிழந்தார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுமட்டுமல்லாமல், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சத்தைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்தி நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் (52) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சைப் பலனில்லாமல் இன்று அவர் உயிரிழந்தார். இவரின் மறைவு இந்தி திரையுலத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது ரசிகர்களும், சினிமா நட்சத்திரங்களும் இவரது மறைவிற்கு சமூக வலை தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். கடந்த 2003ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வந்தார். இந்தியில் வெளியான பேஜ் 3, கார்பரேட், கியா லவ் ஸ்டோரி ஹே உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான இந்தி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில், சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் சமந்தாவின் தந்தையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.