மருத்துவமனை ஊழியர் பணி நீக்கம் - நடிகர் அஜீத் காரணமா? ஆடியோ வைரலால் பரபரப்பு
நடிகர் அஜீத்தை செல்போனில் வீடியோ எடுத்த விவகாரத்தில் மருத்துவமனையைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பர்ஜானா என்பவர் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கொரோனா பரவல் நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜீத் பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது ரசிகையான பர்ஜானா, அஜீத்தை செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் கசியத் தொடங்கியது. இதனையடுத்து, நடிகர் அஜீத்துக்கு கொரோனாவா? என்ற கேள்விக்குறியுடன் சிலர் இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர். இந்த விவகாரம் மருத்துவமனை நிர்வாகத்திடம் செல்ல, உடனடியாக பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் பர்ஜானா, நடிகை ஷாலினியை தொடர்பு கொண்டு தனது பணியில் ஏற்பட்ட சிக்கல் குறித்து கூறியுள்ளார். ஷாலினி வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் பர்ஜானாவை பணியில் சேர்த்து கொண்டாலும், எந்த வேலையும் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு மறுபடியும் பர்ஜானாவை பணி நீக்கம் செய்துள்ளது.
இதனால் மனமுடைந்த பர்ஜானா, நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினியிடம் மன்னிப்பு கேட்டு முறையிடும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.