மரங்களை வெட்டித் தள்ளியதுதான் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு காரணம் - கங்கனா ரனாவத் ஆவேசம்!
கொரோனாவின் 2ம் அலையால் இந்தியா முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் தற்போது தேவைப்படுகிறது.
முதல் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஆனால், தற்போது 54 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விஞ்ஞானிகள் கூட வாழ்க்கையில் பிலாசபி எனப்படும் மெட்டாபிசிகல் சாம்ராஜ்யத்தை நம்புகிறார்கள். அது தவிர, மரங்களால் வலியையும் உணர்ச்சிகளையும் உணர முடியும் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, மனிதர்கள் கொடூரமாக மரங்களை பயன்படுத்துகிறார்கள், அதன்பின் அதனையே அழித்து விடுகிறார். அதன் விளைவே இன்று ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு காரணம்.
சுவாசிக்கும்போது ஆக்ஸிஜன் அளவு குறைவதாக உணர்பவர்கள் இதனை பின்பற்றுங்கள். மரங்களை நடுவதே நிரந்தர தீர்வு, அவற்றை வெட்டவும் கூடாது, உடைகளை மறுசுழற்சி செய்யுங்கள், வேதகால உணவுகளை சாப்பிடவும். இயற்கை வாழ்க்கையை வாழுங்கள். இது தற்காலிக தீர்வே. இப்போதைக்கு உதவு ஜெய் ஸ்ரீராம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.