நடிகர் டேனியல் குறித்து யாராவது அவதூறு கருத்து பரப்பினால் நடவடிக்கை!
நடிகர் டேனியல் குறித்து யாராவது சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பினால் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்படும் என்று வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘பொல்லாதவன்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் டேனியல். இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து டேனியல் ஆபாசமாக பேசியதாக ஜேசன் சாமுவேல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, டேனியல் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ, புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்றும், டேனியலின் பெயரை இழிவுப்படுத்தவே இந்த மாதிரியான செயலில் ஈடுபடுகிறார்கள் என அவரது வழக்கறிஞர் ரகுமான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமூக வலைதளங்களில் டேனியல் குறித்து பதிவிட்டு வரும் அவதூறு வீடியோக்கள் புகைப்படங்கள், மீம்ஸ் போன்றவற்றை உடனடியாக நீக்காவிட்டால் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.