கிரிக்கெட்டில் இருந்து வேறு தொழிலில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்
கோவாவில் செயல்படும் கிளப் ஒன்றை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் விலைக்கு வாங்கியுள்ளார்.
கோவாவில் மிகவும் பிரபலமான காசா டிடோ கிளப் அங்குள்ள பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இது சுற்றுலாவாசிகளின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு வந்தது.
இதனிடையே டிடோ கிளப் நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு வந்துள்ளதாக அதன் உரிமையாளர்களான டேவிட் மற்றும் ரிகார்டோ டிசோசா ஆகியோர் கடந்த மாதம் 28 ஆம் தேதி அறிவித்தனர்.
இந்நிலையில், கோவாவில் உள்ள அர்போரா பகுதியில் செயல்படும் டிடோ கிளப் உரிமையை வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் வாங்கியுள்ளார். அவர் தனது கிளப்புக்கு 333 தந்த்ரா என பெயரிட்டுள்ளார்.
2010-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கெயில் அடித்த அதிகபட்ச ரன்கள் 333 என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக கிறிஸ் கெயில் கூறுகையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கேளிக்கை நிகழ்ச்சிகள், தரமான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தந்த்ரா நிறுவனம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.