வைகையாற்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்..!
மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுடன் நடக்கும் இந்த திருவிழாவை காண சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்றபோது நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு பலருக்கும் மூச்சித் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அவர்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது இருவர் உயிரிழந்தனர்.
மேலும் 15 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் மூர்த்தி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவருக்கும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் வழங்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.
படுகாயமடைந்த ஒருவருக்கு ரூ.2 லட்சமும் மற்றும் லேசான காயம் அடைந்த 7 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.