உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து உக்ரைனின் 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது ரஷ்யா.
உக்ரைன் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதலை தொடங்கி நடத்திவருகிறது.
இந்நிலையில், காலை முதல் தாக்குதலை நடத்திவரும் ரஷ்யா உக்ரைனில் உள்ள வான் பாதுகாப்பு அரணை கைப்பற்றி விட்டதாக அறிவித்தது.
உக்ரைனில் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு சொந்தமான 2 நகரங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
ரஷ்யப் படைகள் உக்ரைனில் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து உக்ரைன் மக்கள் கிவ் பகுதியை விட்டு வெளியேறி வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உக்ரைன் மீது பல மணி நேரமாக தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் உணவிற்காகவும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காகவும் அங்குமிங்கும் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
ரஷ்யாவின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. நேட்டோ அமைப்பும் ரஷ்ய படைகளை உடனே பின்வாங்குமாறு வலியுறுத்தியது.
இந்த் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ரஷ்யா மேற்கொண்டுள்ள நடவடிக்கை என உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது.