சீன விமானம் மலையில் மோதி விபத்து : 132 பயணிகள் உயிரிழந்ததாக தகவல்
சீனாவில் விபத்துக்குள்ளான போயிங் விமானத்தில் பயணித்த 132 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ‘சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்று பகல் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பயணிகளுடன் புறப்பட்டது.
குவாங்சு நோக்கி சென்ற அந்த விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
விமானம் மலைப்பகுதியில் மோதி நொறுங்கி விபத்துக்குள்ளாகியதில் மளமளவென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயணைப்பு படையினர், ராணுவம், போலீசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நபர்கள் யாரும் இதுவரை உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போதுவரை விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படாததால் 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.